சித்திரைத் திருநாள்

 


                   இளம்சூரியன்  எழும்காலை

மலர்பூத்த நற்பூஞ்சோலை

கொத்துமலர் சிரிக்கும் வேளை

முத்துதிர சிரிக்கும் நாளை

சித்திரை கொண்டு வந்தாள்

சேர்த்த பொருள் செலவு செய்தே

சேர்ந்தே நாம் மகிழ்ந்திடுவோம்.


👏

 

 சின்னஞ்சிறு பெண்ணாக

சிலையலங்கார வடிவாக – வருகின்றாள்

அன்னம் போல நடைகொண்டு

அசைந்து அசைந்து ஆடுகின்றாள்.

 

பால் வடியும் முகத்தையே

பார்வைகள் பல நோக்கிடவே

பல் காட்டி சிரிக்கின்றாள் – முத்தம்பல

பொழிந்திடவே செல்வோம் – நம்மை

எட்டி உதைத்திடினும்

எட்டிக் காயாகக் கசந்திடினும்

எரித்து அதைத் தள்ளிடாமல்

ஏற்றிடுவோம் சித்திரை தனை.

 

👏

சிங்கார வடிவாக

சிலையலங்கார ஊர்வலமாக

சிரிப்போடு உதிர்க்கின்றாள்

சிறைவைத்து மூடுகின்றாள்.

 

வலிப்போடு நடக்கின்றார்

வரிந்துக்கட்டிப் பேசுகின்றார்

மாறிவரும் காலம் நோக்கி

மாறியே போகின்றார்.

 

இருந்தாலும்,

வரவேற்கின்றோம்

வரவினை விரும்பாமலே.

 

அதனாலே,

சித்திரை இன்று சிரிக்கின்றாள்

சிலம்பாட்டம் போடுகின்றாள்

சேர்த்து வைத்த வெப்பமெல்லாம்

சேர்த்தே விட்டிடுவாள்

சேர்ந்தே நாம் பெற்றிடுவோம்.

 

👏

புத்தாண்டு நாளிலே

புதுமுகம் கண்டிட்டேன்.

புத்துயிர் பெற்றிட்டே

புதுஒளி நோக்கிட்டேன்.

 

புதுஒளி நோக்கியே

புத்துணர்ச்சி கண்டிட்டேன்

புதுவாழ்வு அமையுமென்று

பூமாரியை அழைத்திட்டேன்.

 

பூமாரியைத் தான் நானழைத்தேன்

பொன்மாரியைத் தந்திட்டாள்.

பூலோகம் வாடட்டுமே என்று

பூரிப்போடு நிற்கின்றாள்

சித்திரை என்னும் பெயருடையாள்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா