மாணவர்கள்

 

நாங்கள்

பல்கலைக் கழகத்தில்

சிதறிக் கிடக்கின்ற

அர்ச்சனைப் பூக்கள்.

 

எங்களின்

தலையெழுத்துக்களைப்

பிரம்மன் நிர்ணயிக்கவில்லை

பல்கலைக் கழகம்தான்.

 

நீர் வேண்டி

நிலமெலாம் வாய்பிளந்து

இருப்பது போல் – தேர்வில்

வெற்றி பெறவேண்டியே

வருடம் இருமுறை

புத்தகத்தைப் பார்க்கும்

புத்தகத்தின் பங்காளிகள்.

 

நாங்கள்

வகுப்பில்

முன் வரிசையில் அமரும்

முதல்  மாணவர்கள்

எங்களின் பார்வைகள்

ஆசிரியரை நோக்கும்

எண்ணங்களோ

பேருந்தில் மோதும்.

 

அறுவை ஆசிரியர்களின்

அறுவைகளைப் பொறுமையோடு

கேட்டுக் கொண்டிருக்கும்

எதிர்காலச்

சமத்துவத்தின் தலைவர்கள்.

 

அறிவியம்

ஏற்க வேண்டிய நாங்கள்

அவ்வப்பொழுது

தீப்பந்தங்களையும் ஏந்துகின்றோம்.

 

எங்களின்

ராக்கெட் எண்ணங்களுக்குத்

தடை விதிக்கும்

கன்னிகளின் கண்களில்

சிறை கொள்ளும்போது

பெற்றோர்களை மறக்கும்

நாளைய விளைச்சல்கள்.

 

காதலிக்கத் தெரியாமல்

காதலித்துவிட்டு

கால் நோக நின்றிருக்கும்

காதலின் கைதிகள்.

 

நாங்கள்

பாலைவனத்தை

நேரில் பார்த்ததில்லை.

எங்கள்

காதலிகளின் நெஞ்சுக்குள்ளே

காண்கிறோம்.

 

எங்களின் உதடுகள் என்றும்

சிவப்புத்தான்.

 

காதலிக்கு

முத்தம் கொடுத்தே

சிவந்தது ஒரு வர்க்கம்

தோல்வியால்

சிகரெட் பிடித்தே

சிவந்தது மறுவர்க்கம்.

 

எங்களின் மனங்கள்

தென்றல் காற்றாலும்

கலைந்து போகும்

மணல் வீடுகள் – ஆனால்

சிலர் மனதில் மட்டும்

புயல் அடித்தாலும்

திசை திரும்பாத

கலங்கரை விளக்குகள்.

 

உல்லாச வாழ்க்கையை

விரும்புகின்ற

ஊர் சுற்றிப் பறவைகள்.

 

வானத்து

நிலவைப் பார்த்து

நிலத்து

நிலவை வர்ணிக்கும்

வர்ணித்துக் காதலிக்கும்

தென்றலின் கூட்டாளிகள்.

 

உங்களில் ஒருவன் என்று

ஊரை ஏய்க்கும்

வருங்காலத்தின்

சட்டமன்ற, நாடாளுமன்ற

உறுப்பினர்கள்.

 

புதுமொழியை உண்டாக்கும்

இக்கால ஆய்வாளர்கள்.

 

கையிலொரு டைரியும்

அதிலேயொரு சீப்பும்

அழகிய கர்ச்சீப்பும்

முடிந்தால்,

ஒரு பொட்டலம் பௌடரும்

அதுகொண்டு ஜொலிக்கும் – இது

எங்களின் அன்றாட

ஊர்வலத்தில்

எடுத்து வரப்படும்

அலமாரியின் சாதனங்கள்.

 

நாங்கள்

நோட்டு எடுத்து வருவது

குறிப்பு எழுதுவதற்கல்ல

காதல் கடிதம் எழுதுவதற்கு.

காதல், வற்றிவிட்டால்

கதை எழுதும்

வருங்கால எழுத்தாளர்கள்.

 

மூன்று மணிநேரம்

எழுதுவதைவிட

24மணி நேரமும்

எழுதுவதையே விரும்புகின்றோம்

தேர்வையல்ல

எங்களின், காதல் கதைகளை.

 

வஞ்சிக்கு அடிமைப்பட்ட

வஞ்சக் காரர்கள்

அன்புக்குக் கட்டுப்பட்ட

பண்புக் காரர்கள்

சொல்லுக்கு அடிபணியா

செயல் வீரர்கள்- சிலர்

செய்கைக்கு மயங்கிவிடும்

மையல்காரர்கள்.

 

நாங்கள்

எப்பொழுதுமே தூங்கியதில்லை

பகலெல்லாம் அவள் நினைவு

இரவெல்லாம் அவள் கனவு.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா