ஓ… வானமே

உன் முகத்தில் பருக்கள்

வந்திருப்பது இன்றுதான் கண்டேன்.

ஆம், நட்சத்திரப் பூக்களையேன்

உன் முகத்தில் கொலுவீற்றிருக்கின்றாய்?

 

நீ தினமும் அலங்காரம் செய்துகொள்ளும்

சிங்காரி என்பதை

பானுமதிக் கண்ணாடியால் காட்டி

என் மனதையேன் அலைக்கழிக்கின்றாய்?

 

அலைமகளின் உடன்பிறப்பு என்று

கலைமகளின் துணையோடு எங்கள்

நினைவலைகளைத் தூண்டிலில்

மாட்டியேன் இழுக்கின்றாய்?

 

அதனால்தான்,

உன் முகத்தில் எங்களின்

உதடுகளைப் பதிக்கவே

பகலிரவாய் பாடுபட்டு

ஏவுகணையைக் கண்டோம்.

 

உன் கூந்தலுக்குப்

பூச்சூடவே நாங்கள்

ஏவுகணையோடு அவ்வப்போது

ஏறி வருகின்றோம்.

 

உன் மௌனப் புன்னகைக்கு

மெருகூட்டுவதற்கு நாங்கள்

எங்கள் நாட்டு கொடிகளைப்

பறக்க விடுகின்றோம்.

 

உன் கருங் கூந்தல்

அலைபாயும் போதுதான்

எங்கள் நிலங்கள்

ஏறு நடை போடுகின்றன.

 

அபயம் கொடுக்கும்

அன்பே, நீயேன் சில சமயம்

அபாயத்தையும் தருகின்றாய்.

 

சிலரின் கண்ணீரில்தான்

பலரின் பன்னீர் வாழ்க்கை

ஆம், உன் கண்ணீரைத்தான்

நாங்கள் தினமும் எதிர்ப்பார்ப்பது.

 

நாங்கள் சுயநலவாதிகள் என்று

நினைத்துவிடாதே – உன்

நிலைமை மாறினால் எங்கள்

நிலைமை கேள்வியோடுதான்?

 

உனக்கென்ன,

மாற்றுக்கண் வியாதியா?

இரவும் பகலும்

மாறிப் பார்க்கின்றாய்?

 

நாங்கள் என்றென்றும்

உன் தூண்டில் கைதியாக

தூண்டிலிலியே

துடிக்க வைத்துக் கொண்டிருப்பாயா?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா