நான் யார்?
பட்டங்கள் இங்கே
பறக்கின்றன –
பாரில்
சட்டங்கள் அங்கே
எரிக்கப்படுகின்றன.
பட்டினிகள் இங்கே
கூடுகின்றன –
பட்டு
மெத்தைகள் அங்கே
சேர்க்கப்படுகின்றன.
பாவைகள் இங்கே
பாவைதான் – பார்வை
பட்டால் அங்கே
சேவை தான்.
வேலைகள் இங்கே
கொஞ்சம்தான்
– வால்களின்
கெஞ்சல்கள் அங்கே
தஞ்சம் தான்.
ஜோடிப்புறா இங்கே
சேர்ந்தது தான்
– தனியான
ஜோடிக்கு அங்கே
சோதனை தான்.
சோதனைகள் இங்கே
மிச்சம் தான்
– அவன்
சோம்பலுக்கு அங்கே
சம்பளம் தான்.
உழவன் இங்கே
உழுகின்றான்
– அதிலே
ஊர்பவன் அங்கே
மிதக்கின்றான்.
நெசவாளி இங்கே
வசவாளி தான்
– பசையாளி
ஒருவன் அங்கே
வகையாளி தான்.
இத்தனையும் பெற்றெடுத்த
இந்தியத் தாயைத்
தான்
இருந்து இங்கே
கேட்கின்றேன்
இந்த பூமி மைந்தனா
நான்?
Comments
Post a Comment