விழித்தெழு மாணவா...

 

மாணவனே,

விழத்தெழ மாட்டாயோ

விடியலைக் காண.

 

உன் சகோதரன்

இரத்தம் சொட்டும் போது

விழிகளையேன் மூடிக்கொள்கின்றாய்?

பிறந்தபோது

கண்திறந்து பிறக்கவில்லை

என்பதற்காகவா?

 

உன் வீரத்தை

எங்கே

அடமானம் வைத்திருக்கின்றாய்?

தன்மானம் காக்கவாவது

மீட்க மாட்டாயோ?

 

நீ

பிறந்தபோது

மூடியிருந்த கண்களுக்கு

விடியல் இன்னும்

வரவில்லையா?

விழித்தெழுந்தால்

பெரும் தொல்லையென்று

யாமத்தை

நோக்குகின்றாயோ?

 

ஓ… மாணவனே

விழித்தெழ மாட்டாயோ

இந்த, விடியலைக் காண.

 

மண்ணில் பிறந்தது

கனவு காண்பதற்கென்று

கனவுலகில்

வாழ்ந்து கொண்டிருக்கின்றாயோ?

 

கங்காரைப் போல்

உனை வளர்க்கின்றார்களே

அந்த, தாய் தந்தையரைப் பாரடா?

 

வறுமையிலே

வறுமை காட்டாமல்

வளர்க்கின்றார்களே – அந்தத்

தாய் தந்தையரைப் பாரடா.

 

இன்னுமா உறக்கம் உனக்கு

மாணவனே

விழித்தெழுந்து பாராயோ

இந்த, விடியலைக் காணாயோ?

 

நீ படுத்திருப்பது

கும்பகர்ணன் கட்டிலா?

ஓ.. அதை என்றோ

எரித்து விட்டதாக அல்லவா

கனவு கண்டுக் கொண்டிருந்தோம்.

 

கூடாரக் குயில்கள்

கூவும்போது

நீ வைத்திருக்கும்

அலாரம் மணியடித்தது

மணியடித்தும் நீ

எழுந்திருக்க வில்லையே.

 

எழுந்திருக்க முயலவில்லையா

எழுந்திருக்க முடியவில்லையா

எழுந்திருக்கவே போவதில்லையா

மாணவனே, கொஞ்சம்

விழித்தெழுந்து பாரடா

நீ பிறந்த தாய் நாட்டை.

 

எங்களின் ஏக்கங்களெல்லாம்

பிரமிடுகளாய் அடுக்கப்படுவதும்

பின்மூச்சிலே கலைக்கப்படுவதும்

உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?

 

எங்களின் எண்ணங்களை

ஹெர்பாரியம் செய்துவிட்டு

உள்ளங்களுக்குச்

சிறை வைத்துக் கொண்டோம்.

முறைதெரியாது

பூட்டிய பூட்டுக்களைத்

திறக்கவும் தெரியாமல்

உடைக்கவும் முடியாமல்

தவிக்கின்றோமே

உடைத்தெரிய வாராயோ?

 

மாணவனே

விழித்தெழுந்து பாராயோ

இந்த, விடியலைக் காணாயோ?

 

எங்களின் கால்களுக்குச்

செருப்பு அணிவது

அழகுக்காகவும் நலனுக்காகவுமல்ல

பாவக் கால்களால்

பூமித் தாயை

உதைக்க வேண்டா என்பதற்காக.

 

மாணவனே

உனக்காக

வாங்கிய செருப்பு

இன்னும் எங்கள்

வங்கியில் பத்திரமாகப்

பாதுகாத்து வைத்திருக்கின்றோம்

ஏனென்றால், நீ

செருப்பு அணியாமல்

இப்பூமியில் நடக்க வேண்டும் என்பதற்காக.

 

கன்னிப் பெண்களின்

கண்ணீர்க் குளங்களில்

நெருப்புக்கள்

முகாமிட்டுவிட்டனவே

அந்தக் கண்ணிரால் உன்னை

குளிப்பாட்டுகின்றாளே

இன்னும், உன் தூக்கம் களையவில்லையா?

 

உன்குருதிக்கென்ன

குருட்டுப் பார்வையா

இல்லை, பர்தாப் போர்வையா?

உணர்ச்சிகளை மூளைக்குச்

செல்லவிடாமல் தடுக்கின்றனவோ

இல்லை, உன்னை படைக்கும்போது

மூளைக்குப் பஞ்சம் வந்ததால்

மூளையில்லாமல் பிறந்துவிட்டாயோ?

 

எங்களின் மூச்சுக் காற்றில்

வெப்பம் அதிகமானதால்

அந்த நிலவும்

சூரியனாகிவிட்டது.

இரவு என்பதே

மறைந்து போனதால்

ஆந்தைகளும்

பட்டினியால் வாடுகின்றது.

 

நாட்டில் வெப்பம் அதிகமானதால்

வீட்டு அடுப்புக்கள் எல்லாம்

வேலை இல்லை என்ற

போர்டு மாட்டிவிட்டன.

 

நீர் பரப்பும் வற்றிவிட்டதால்

வளம் கொழித்த

வளல்களெல்லாம்

வேலை நிறுத்தம் செய்கின்றன.

 

எங்களின்

சிறுகுடலையும் பெருங்குடலையும்

வறுமை

என்னும் மாடுதான்

மேய்ந்து கொண்டிருக்கிறது.

அந்த மாடாவது

பால் கரக்குமாவென்று

காத்திருக்கின்றோம்.

அதுவோ, இன்னும்

தாய்மையாக வில்லையே.

 

கரை கண்டு

நீரில் தவழும்

தாமரை இன்னும்

மலராமல் இருக்குமோ?

விடியல் இன்னும்

உன் நெஞ்சில்

படராமல் இருக்குமோ?

 

மாணவனே

விழித்தெழுந்து பாரடா

விழிப்போடு நில்லடா

 

இனி, நீ

 

உறங்குகின்ற காலமெல்லாம்

          போனதென்று எழுந்திரு

கையிலொரு விற்பிடித்து

          கடமையோடு செயல்படு

கடமையிலே கண்ணாய்நீ

          காலம்போற்ற இருந்திடு

காலத்தில் தலைமகனாய்

          நாடுபோற்ற வாழ்ந்திடு.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா