இப்படியிருந்தால்…

 

நிலவழகை சேர்த்தணைத்தே நின்றாலும்

துணைக்கொரு ஆளில்லை என்றாலே

கணைவிழி காமுகர் எல்லாம்

கண்ணே மணியே என்றுன்னை அழைப்பர்.

 

சமுதாயத் தொண்டே தலைசிறந்ததென்று

சமூகத்தில் தனித்திருந்தாய் என்றால்

சமூகப் பழிசொல் எல்லாம்

கொடூரர் வாய்ச்சொல்லாய் எழுந்தருளும்.

 

புதுமைப்பெண் என்றேநீ திரிந்தாயோ

புவிவாழ் மக்களெல்லாம் மாக்களானால்

புதுவாழ்வு மலருமோ உன்வாழ்வில்

பூவிதழே அழியுமே உன் மூச்சில்

 

மக்களமாய் நீயுடுத்தித் திரிந்தாலும்

மாங்கல்யம் கழுத்தில் இல்லையென்றால்

மடையர்கள் கூட்டம் எல்லாம்

உன்பெயர் பாடித் திரியும்.

 

தேனூறும் தமிழாவா யென்று

தெள்ளுதமிழ் கவிகள் எல்லாம்

தக்கதொரு தலைவன் வைத்தே

காவியங்கள் அமைத்து விட்டார்.

 

மேகமாய் நீயலைந்து திரிந்தாலும்

தென்றலாய் நான்வந்து பட்டால்தான்

தெள்ளுதமிழ் அறிஞர் எல்லாம்

தேன்மழையே என்றுன்னைப் பாராட்டுவர்.

 

என்னன்பு உன்னோடு சேர்ந்தாலன்றோ

தேனுண்ட நாவில் பாலுமினிக்கும்

பாவாண்ட புலவன் வாக்கும்

பழமை போற்றி வாழுமன்றோ.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா