அழுகைகள்
தாய்க்குத் தெரியும்
தன் குழந்தை அழுவது
இந்தியத் தாயே
என் புலம்பல்
உன் காதில் விழவில்லையா?
உன் முகமே இமயமானதால்
நீ விடும் கண்ணீரில்
என் விழிநீர்
மங்கலானதோ?
இல்லை,
உன்னைச் சுற்றிக்
கடலிருப்பதால்
அதிலே மூழ்கிவிட்டாயோ
அதனால்தான்
என் புலம்பல்
உன் காதில் விழவில்லை
போலும்.
கங்கைநதிக் கரையோரம்
காவலான சோலையின்று
மாபெரும் வெள்ளத்தால்
மங்கியே போனது
– நான்
என் இமையினைச்
சொல்லுகிறேன்.
இந்த வாசம்
உன்சுவாசத்திற்குத்
தெரியவில்லையா
இல்லை
சுவாசமில்லாமல்
இருக்கின்றாயா
என்னுள்ளக் கதவைத்
திறந்து
கடமை என்னும்
எழுத்துக்களை
கண்ணியம் என்னும்
பண்பாட்டுக்கு
கட்டுப் பாட்டுக்கே
அடிமையாய்
முடங்கியுள்ளது
என்பேனா.
அடிமை விலங்கு
தகர்ந்திட
ஆடம்பரமாய், ஆனந்தமாய்
என் எழுதுகோல்
எழுதும் நாள்
விரைவில் தான்
உள்ளது.
அது, என் தாய்க்கு
முழுச் சுதந்திரம்
கிடைக்கும் நாள்
என் பேனாவிற்கே
பேனர் ஒட்டும்
நாள்
அந்தநாள்
என்
வாழ்வில் திருநாள்.
என்
தாய்க்குத் தெரியும்
நாள்
அழுவது எதற்கென்று.
Comments
Post a Comment