பகிர்ந்திடுவோம் வாராயோ?


வீணையெனும் மேனிக்கு

இசையே பிறப்பிடமாம்

என் விரல் தீண்டும்போது

எண்ணிலடங்கா இராகங்கள்

எழுந்தோடி வந்தன – ஆனால்

ஒரு இராகம் மட்டும்…

 

விரல் மீட்டும் வீணையே

விரதம் இருப்பதேன்

கரம் தொட்டு எழுப்புகிறேன்

கண்ணகியாய் ஆவதேன்.

 

நான் மீட்டும் இராகங்கள்

நாணிலத்தில் நிலைத்தன

ஒரு சுருதி மட்டும்

வரவே மறுத்தன.

 

உன்னிதயச் சுருதியை

மீட்டத்தானே

இவ்வுலகில் வாழ்கின்றேன்.

 

உன்னிதயத்தை

யாருக்குத்

தாரை வார்த்துக் கொடுத்து விட்டாய்

 

எனக்குத் தெரியும்

உன்னுள்ளத்தில் இருப்பது

நான்தான் என்று

ஆனால், ஏனோ என்னிடம்

ஒத்துழைக்க மறுக்கின்றாய்.

 

உன்னில் வாசிக்காத

இராகங்களே இல்லையென்று

கனவு கண்டுக் கொண்டிருந்தேன்.

 

பூபாலம் வாசித்தேன்

பூலோகம் மறந்துவிட்டேன்.

 

கல்யாணி வாசித்தேன் – உன்

கண்ணீரைத் துடைத்துவிட்டேன்.

 

யுகாதி வாசித்தேன்

யுகமே இருளக் கண்டேன்.

 

உன்னுள்ளக் கிணற்றில்

நீச்சல் அடிப்பதும்

எண்ண வானில்

பறந்து திரிவதும்

வண்ணப் பூமியில்

தவழ்ந்து வருவதும்

உன்னில் காணாமல் போன

இதயத்தைத் தேடத்தானே?

 

சிறகுகள் இல்லை

பறக்கின்றேன்

உறவுகள் தேடி

அலைகின்றேன்

கனவுகள் கண்டு

திகைக்கின்றேன் – அது

நிஜமாய் மாற

ஏங்குகின்றேன்.

 

உள்ளச் சுருதியை எழுப்பினேனே – என்

எண்ணக் குரலை இசைத்தாயே

பண்பாடே இசைந்தாயே

பாதியிலே விட்டாயேன்?

 

உள்ளத்தில் குறையிருந்தால்

எண்ணத்தில் தடையிருந்தால்

சொந்தத்தில் நானிருப்பேன்

பகிர்ந்திடுவோம் வாராயோ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா