கண்ணீர்

தெருவெங்கும் மின் விளக்குகள்

ஊரெல்லாம் திருவிழாக் கோலம்

விட்டிற்கு வீடு கொண்டாட்டங்கள்

ஆனால்,

உன் இதயக் கோயிலில் மட்டும்

எண்ணிலடங்கா போராட்டங்கள்.

 

எனக்குத் தெரியும்

உன் உள்ளத்திலிருப்பது.

 

உண்மை

அதன் விலை

கேட்பவர்களிடையேயும்,

நியாயங்கள்

அவற்றை நிறுத்திப் பார்க்க

முடியாதவர்களிடையேயும்

 

உன் மனக் குழப்பம்

மணம் வீசுமென்று நீ

நினைப்பது தவறு.

 

வான் இடியோடு

உன் புலம்பல்

திசைமாறிப் போனதோ

 

உன் கண்ணீர்த் துளிகள்

பெய்த மழையில் சேர்ந்ததாலே

வெள்ளக்காடு வந்ததோ

 

ஆற்று நீரும் உப்புக் கரிப்பதேன்

உன் கண்ணீர் – அதில்

உன்னதமாய் உயர்ந்துவிட்டதினாலா?

 

பெய்த மழையனைத்தும்

உன் இதய நெருப்பை

அணைக்கத் தீர்ந்து போனதால்

பச்சைச் செடிகளின்று

வாடியே இருக்கின்றன.

 

உன் புலம்பல் கேட்டு

கும்ப கர்ணனும் விழிக்கலாம்

ஆனால், இந்தக் குடியர்கள் மட்டும்

விழிக்கவே மாட்டார்கள்.

 

நீ விடும் கண்ணீரால்

கழுத்துச் சங்கிலியும்

மிதக்கின்றது போலும்

 

உன் பாவப்பட்ட பாதங்களைக்

கழுவிக் கொள்ள

புனித நீர் வற்றிப்போனதால்

புனித நீராக்கிக் கொள்கின்றாயோ?

 

பூப்போன்ற கைவிரல்கள்

கண்ணீருக்கு

ஒத்தடம் கொடுக்கின்றதுபோலும்

 

உன் இமைகள்

கண்ணீர் அணைக்குக்

கரையெழுப்புகின்றதோ?

 

காந்த விழிகள்

மேகம் என்ற போர்வையால்

மூடி வைக்கப்பட்டனவோ?

 

கோபப்பட்ட இதழ்களுக்குக்

கண்ணீர்

உரமூட்டுகின்றதோ?

 

பஞ்ச நதிகள் இன்று

பத்தினி உன் முகத்திலேயே

பல்லக்கில் வருகின்றதோ?

 

உப்பளங்கள் இன்று

உன் கண்ணீருக்காக

தவம் கிடக்கின்றனவோ?

 

கண்ணீர் பூமியில் பட்டதும்

கிணற்று நீர் வற்றுவதேன்

கிணற்றுநீரைக் குடித்துத்தான்

கண்ணீராய் விடுகின்றாயோ?

 

உன் புலம்பல்தான்

எனக்குத் தெரிகின்றது.

 

ஊர்ச்சுற்றியின் திறமைக்கு

ஊக்கப்படுத்தும்

உன் கண்ணீரை மட்டும்

தானமாகக் கேட்கின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா